a planter,his horse cart and cart keeper

a planter,his horse cart and cart keeper

Friday, September 3, 2010


Photograph of tunnels on the railway near Ohiya railway station taken in 1894. Photograph originally taken by William Henry Jackson for the World Transportation Commission.
Date Original 1894

No comments:

Post a Comment

சி.வியை மறந்த மலையகம்



வீடற்றவன் என்ற நாவலை தீர்க்கதரிசனமாகத்தான் அவர் எழுதினாரே தெரியவில்லை
அவரது அலுவலக அறை இன்று ஒரு குடும்பத்தின் சமையலறையõக காட்சியளிக்கின்றது.
எந்த தொழிலாளர் வர்க்கத்திற்காக இவர் கவி படைத்தாரோ அதே தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் கைவிடப்பட்ட நிலையில் புற்கள் மண்டி தோற்றமளிக்கிறது சி.வியின் கல்லறை
மலையகத்தின் விடிவுக்காய் குரல் கொடுத்தவர்கள் பலர் இன்று மறக்கப்பட்டு வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. எனினும் பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர்களின் இன்னல்கள் சோகங்களை இலங்கையைத்தாண்டி வெளிஉலகுக்கு தனது அற்புதமான படைப்புக்கள் மூலம் கொண்டு வந்தவர் மூத்த இலக்கியவாதி மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை ஆவார். செப்டெம்பர் 14 ஆம் திகதி அவரின் 95 ஆவது பிறந்த நாள் நினைவு தினமாகும். படைப்பிலக்கியம்,அரசியல், தொழிற்சங்கம் என பன்முக ஆளுமை நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் வாழ்ந்து மறைந்த சுவடே தெரியாமல் அமைதியாக இருக்கிறது அவர் பிறந்து வாழ்ந்த வட்டகொடை மடக்கும்பரைதோட்டம். மலையகமும் அதே நிலையில் தான் இருக்கின்றது என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. வீடற்றவன் என்ற நாவலை தீர்க்கதரிசனமாகத்தான் அவர் எழுதினாரே தெரியவில்லை இறுதியில் அவர் வாழ்ந்து மறைந்த வீட்டிலிருந்தே அவரின் குடும்பத்தினரை வெளியேற்றியது தோட்ட நிர்வாகம்.இன்று அவர் வாழ்ந்து மறைந்த வீட்டின் நிலைமையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
எந்த சமூகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்தாரோ அவர்கள் மத்தியில் அவர் பேசப்படாது இருப்பதை ஜீரணிக்கமுடியவில்லை. அவர் மண்ணில் பிறந்தவன் என்ற அடையாளப்படுத்தல்களுக்கும் அப்பாற்பட்டு ஒரு உயர்ந்த இலட்சிய நோக்கத்தில் தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்த அந்த உன்னத மனிதரின் இல்லம் நோக்கிச்சென்றேன். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பங்களாவாக காட்சியளித்த அந்த குடியிருப்பு இன்று பல தனித்தனி குடும்பங்களின் வாழ்விடமாக விளங்கியது. இங்கு குடியிருந்த மனிதரைப்பற்றி உங்களுக்குத்தெரியுமா என்றால் உதட்டை பிதுக்குகின்றனர். வீட்டினுள்ளே நுழைந்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. சி.வி வாழ்ந்த வீடா இது ? அவரது அலுவலக அறை இன்று ஒரு குடும்பத்தின் சமையலறையõக காட்சியளிக்கின்றது. பெருந்தோட்டப்பகுதிகளில் விறகு மற்றும் பழைய பொருட்கள் வைக்கும் இடமான அட்டாலில் விறகுகள் நிறைந்து கிடக்கின்றன.
அதைத்தாண்டி அவரின் உறங்கும் அறைக்குச்சென்று பார்த்தால் சுவரில் வெடிப்புகள் விழுந்து இருட்டறையாக காட்சியளிக்கின்றது. மலையக சமூகத்திற்கு வெளிச்சம் கிடைக்க போராடிய பேனா போராளியின் சிந்தனைகள் இந்த அறையில் தான் தோற்றம் பெற்றதோ? சரி அவர் பாவித்த பொருட்கள் தளபாடங்கள் எல்லாம் எங்கே என்று விசாரித்தால் அவரின் குடும்பத்தை இவ்வீட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையின் போது அவை தூக்கி எறியப்பட்டன என்றும் அச்சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் அதை தமது வீட்டிற்கு எடுத்துச்சென்றனர் என்றும் கூறினர். ஒரு சிலரோ அவரது ஆவணங்களை உறவினர்கள் தலைநகருக்கு எடுத்துச்சென்றனர் என்று கூறினர். மற்றுமொருவர் இன்னுமொரு தகவலை சொன்னார். சி.வி பாவித்த மேசையும் அலுமாரியும் அருகில் ஒரு வீட்டில் இருப்பதாகக்கூறினார். ஓடோடிச்சென்றேன் அவ்வீட்டிற்கு , ஒரு அறையில் சி.வி பாவித்த மேசையும் அலுமாரியும் காணக்கிடைத்தன.மேசையை வாஞ்சையுடன் வருடிப்பார்க்கும் போது புல்லரித்தது. தனது படைப்புப்பொக்கிஷங்களை சிருஷ்டிப்படுத்த உதவிய மேசை அல்லவா இது ? அருகில் உடைந்து விழும் நிலையில் அவரது அலுமாரி. பெரும் துயரத்துடன் அங்கிருந்து வெளியேறினேன். அடுத்ததாக நான் சென்ற இடம் மக்கள் கவிஞன் மண்ணுள் உறைகின்ற இடமாகும்.

புழுதிப் படுக்கையில் புதைந்த

என் மக்களைப்போற்றும்

இரங்கற் புகழ் மொழி இல்லை
ஊணையும் உடலையும் ஊட்டி

இம் மண்ணை உயிர்த்த வர்க்கு

இங்கே உளங்கசிந்த அன்பும்
பூணுவாரில்லைஅவர்புதைமேட்டிலோர் கானகப்பூவைப்பறித்துப்போடுவாரில்லை

என்ற வரிகள் தான் ஞாபகத்திற்கு வந்தன. தேயிலைச்செடிகள் மத்தியில் தனது வாழ்க்கையை தொலைத்த எந்த தொழிலாளர் வர்க்கத்திற்காக இவர் கவி படைத்தாரோ அதே தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் கைவிடப்பட்ட நிலையில் புற்கள் மண்டி தோற்றமளிக்கிறது சி.வியின் கல்லறை.
தன்னை மறைக்கத்தானோ அவ்விறைவனும்தளிர் பசும் புல்லால் தரை மறைத்தனனோ என்ற அவரது வரிகளில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்பது இங்கு வந்து பார்த்தால் புரிகிறது.
சி.வி.வேலுப்பிள்ளை காலமாகி எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதியோடு 25 வருடங்கள் நிறைவுறுகின்றன. அவரது இல்லத்தை நினைவாலயமாக்கி அவர் பாவித்த பொருட்களை சேகரித்து அங்கு காட்சிப்படுத்த வேண்டும் என்று ஆங்காங்கே சிலர் அவ்வப்போது புலம்புவதோடு சரி அவர் வாழ்ந்த வீட்டையும் அவரது கல்லறையையும் எட்டிக்கூட பார்க்க எவரும் வருவதில்லை.

வாடிய ரோசா மலரிதழ் போல வாடியே

அன்னார்வாழ்க்கை கழிந்தது


என்ற அவரது கவி வரிகளை அவருக்கே சமர்ப்பணம் செய்து விட்டு அவரது கல்லறைக்கு அஞ்சலி செய்து அவ்விடம் விட்டு நகர்ந்தேன்.

இலங்கைக்கு தேயிலையை அறிமுகப்படுத்தியவர்



ஜேம்ஸ் டெய்லர் என்றதும் எமக்கு ஞாபகம் வருவது இலங்கையில் தேயிலையை அறிமுகப்படுத்தியவர் என்பது தான். இவரைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள வேண்டியது இந்த தலைமுறையினருக்கு மிக அவசியமானதொன்று. பிரித்தானியரான ஜேம்ஸ் டெய்லர் 1835 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி இங்கிலாந்தில் பிறந்தார். 1852 ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு வந்த போது கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர தோட்டத்தில் நிரந்தரமாகத்தங்கி விட்டார். தேயிலை தொழிற்றுறை மற்றும் தேயிலைச்செய்கை பற்றியும் அறிந்து கொள்வதற்காக இவர் 1866 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்து அங்கு பல விடயங்களைக்கற்றார். பின்பு 1867 ஆம் ஆண்டு நாடு திரும்பிய இவர் தான் கற்ற விடயங்களையே மூலதனமாக்கொண்டு தான் வசித்த லூல்கந்துர தோட்டத்தில் 19 ஏக்கரில் தேயிலைப்பயிர்ச்செய்கையை ஆரம்பித்தார். அத்தோடு சிங்கோனாவையும் பயிரிட்டனர். இலங்கையில் முதன் முதலாக தேயிலை பயிரிடப்பட்ட இடமாக லூல்கந்துர தோட்டமே விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 1872 ஆம் ஆண்டு இங்கு அவர் ஒரு தேயிலை தொழிற்சாலையையும் ஆரம்பித்தார். தேயிலை தொழிற்றுறையை இலங்கையில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு அச்சந்தர்ப்பத்தில் இங்கு வந்த ஸ்கொட்லாந்து நாட்டவரான தோமஸ் லிப்டனிடம் இணைந்து தேயிலையை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடினார் டெய்லர். ஐக்கிய இராச்சியத்தின் கோடீஸ்வரராக விளங்கிய தோமஸ் லிப்டன் 1890 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த பயணத்தை இடை நிறுத்தி இலங்கை வந்தார்.அதற்குக்காரணம் அப்போது இலங்கையின் தேயிலை உற்பத்தி பற்றி எழுந்த கதைகள் தான். டெய்லரை சந்தித்த தோமஸ் லிப்டன் அவரிடம் இலங்கைக்தேயிலையை வாங்கி பிரித்தானியாவில் விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்தார்.இதன் பிறகு டெய்லர் இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இத்துறையை முன்னேற்றினார். 23 பவுண்ட்களில் ஆரம்பித்த இவரது தேயிலை ஏற்றுமதி 81 தொன்களாக அதிகரித்து 1890 ஆம் ஆண்டின் இறுதியில் 22,900 தொன்களாக உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் டெய்லர் ஹேவாஹெட்ட பிரதேசத்தின் காட்டுப்பகுதியை சுத்தப்படுத்தி 19 ஏக்கரில் தேயிலை விதைகள் மூலம் தேயிலை பயிரிட்டார். தனது அயராத முயற்சி காரணமாக 1875 ஆம் ஆண்டு இலண்டனில் இடம்பெற்ற தேயிலை ஏல விற்பனையில் இலங்கைத்தேயிலையை இடம்பெறச்செய்தார்.இலங்கையின் தேயிலைத்தொழிற்றுறை அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. பல தேயிலை கம்பனிகள் இதன் இலாபத்தை அனுபவிக்க தயாராகின.சிறிய தேயிலை தோட்டங்கள் பலதை இந்த கம்பனிகள் விலை கொடுத்து வாங்கின. டெய்லர் இருந்த லூல்கந்துர தோட்டமும் இதற்கு இரையானது. இலங்கையில்முதன் முதலாக தேயிலையை பயிரிட்டவர் என்ற பெருமைக்குரிய டெய்லர் மிகுந்த மனவேதவையுடன் லூல்கந்துர தோட்டத்தை விட்டு வெளியேறினார்.தனது வாழ்நாளில் அரைவாசியை இலங்கையிலேயே கழித்தார்.அதாவது 57 வருடங்கள். 1892 ஆம் ஆண்டு உயிர் நீக்கும் வரை அவர் இலங்கை மண்ணை விட்டு நீங்கவில்லை. லூல்கந்துர தோட்டத்தை விட்டு நீங்கிய ஜேம்ஸ் டெய்லர் வயிற்று உபாதை நோயால் பாதிக்கப்பட்டு அவ்வாண்டே காலமானார். அவரது உடல் கண்டி மகியாவ மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் இவை;


"In pious memory of James Taylor of Loolecondera Estate Ceylon, the pioneer of the cinchona and tea enterprise in this island, who died May 2, 1892, aged 57 years"..


ஜேம்ஸ் டெய்லர் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதாவது 1893 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சுமார் பத்து இலட்சம் தேயிலை பைக்கற்றுகள் இலண்டனுக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டு அமெரிக்காவின் சிக்காக்கோவில் இடம்பெற்ற உலக சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. 1867 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் 80 வீதமானவை பிரித்தானிய கம்பனிகள் வசம் இருந்தன. 1971 ஆம் ஆண்டே இலங்கை அரசாங்கம் நிலவுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தி பல தேயிலை தோட்டங்களை தன்வசமாக்கியது. 1992 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லர் இறந்து நூறாண்டுகள் நினைவு கூறப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் அப்போதைய பிரித்தானிய உயர்ஸ்தானிகராக இருந்த ஜோன் பீல்ட் (ஒணிடண ஊடிஞுடூஞீ) கூறிய வார்த்தைகள் உண்மையில் அர்த்தம் வாய்ந்ததாகத்தான் அமைந்தது.இலங்கையின் மத்திய மலை நாட்டை செதுக்கியவர்களுள் பல தனிப்பட்ட நபர்களும் தொழிலாளர்களும் அடங்கலாம், ஆனால் மத்திய மலை நாட்டை அழகு படுத்தியதில் ஜேம்ஸ் டெய்லர் என்ற மனிதரின் பங்கு அளவு கடந்தது. தேயிலையைப் பயிரிட்டதன் மூலம் அவர் இதை செய்தார், இவ்வாறு அவர் கூறினார்.


"It can be said of very few individuals that their labors have helped to shape the landscape of a country. But the beauty of the hill country as it now appears owes much to the inspiration of James Taylor, the man who introduced tea cultivation to Sri Lanka".


ஜேம்ஸ் டெய்லர் வாழ்ந்த இடத்தில் அவ்வாண்டு நூதன சாலை ஒன்றும் அமைக்கப்பட்டது. இன்று தேயிலைத்தொழிற்றுறையில் உலகில் தனித்துவமிக்க நாடாக விளங்குகிறது இலங்கை. மேலும் தேசிய வருமானத்தில் பெரும்பங்கு வகிக்கின்றது. இத்தனைக்கும் காரணமான ஜேம்ஸ் டெய்லர் என்ற மனிதரை நாமும் ஞாபகப்படுத்திக்கொள்வது தான் நாம் அவருக்கு செய்யும் நன்றிக்கடன்.